ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ரகசியசிம் 2

உதாரணமாக, அருண எனத் தொடங்கும் பெயர்கள்.

கடபயாதி ஸங்க்யை படி அருண எனும் வார்த்தைக்கு 12 எனும் மதிப்பு வருகின்றது. (கடபயாதி ஸங்க்யை – சற்றே கடினமான சூத்திரங்களைக் கொண்டது. எளிதில் புரிபடாதது. தகுந்த ஆசிரியர் கொண்டு கற்க வேண்டும்)

அருணன் என்றால் சூரியன் என்று பொருள்.

சூரியன் ஒரு வருடத்தில் 12 மாதங்களைக் கடந்து வருகின்றார்.

சூரியனுக்கு 12 பெயர்கள் உள்ளதாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.

(மித்ரன், ரவி, சூர்யன், பானு, ககன், பூஷன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்)

அதே போல மற்றொரு பன்னிரண்டு பெயர்களையும் புராணங்கள் கூறுகின்றன. (1.தபினீ, 2.தாபினீ, 3.தூம்ரா, 4.மரீசி, 5.ஜ்வாலினி, 6.ருசி, 7.ஸுக்ஷும்னா, 8.யோகதா, 9.விச்வா, 10.போதிணீ, 11.தாரிணீ, 12. க்ஷமா)

அருண எனும் பதத்திற்கு 12 எனும் மதிப்புடையதால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அருண எனும் தொடங்கும் பெயர்கள் 12 தான் அமைந்திருக்கின்றன.

இதே போல பல நாமாக்களுக்கு கடபயாதி ஸங்க்யைபடி – எண்ணிக்கையின் மதிப்பும், அதனைச் சார்ந்த நாமாவளிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகவே அமைவது பெரும் ஆச்சர்யத்தைத் தருகின்றது.

மேலே சொன்னது போல, மற்றும் ஒரு வகையில் லலிதா ஸஹஸ்ரநாமம் பகுக்கமுடிகின்றது. அது, 3 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள், 8 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் என்றும் பகுக்கப்படமுடிகின்றது.

சந்திரனை ஒப்பிடாத எந்தவொரு அழகியல் இலக்கியமும் இல்லை.

அதன்படி, சந்திரனை வர்ணித்து லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பல பெயர்கள் அமைந்துள்ளன.

அம்பிகையின் நெற்றியானது – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ… என்ற நாமத்தின் படி, எட்டாவது தினத்திய சந்திரனைப் போன்று அழகுற விளங்குகின்றது என்று லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுகின்றது.

அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை 15 கலைகள் உள்ளன. அதில் எட்டாவது நாள் சந்திரன் – அரை சந்திர (7 1/2க்கும் அதிகமாக) வடிவத்திற்கும் சற்றே கூடுதலாக – விளங்கும். அந்த அர்த்தசந்திர வடிவம் அம்பிகையின் நுதலாக, நெற்றியாக விளங்குகின்றதாம்.

அப்படி தலையின் மேல் பாகமாகிய நெற்றி அரைச் சந்திர வடிவமும், கீழ் பாகம் அம்பிகையினுடைய சுயமான ஒளி பொருந்திய வடிவத்தினால் மற்றும் ஒரு அரை சந்திரன் வடிவமாகவும் திகழ்கின்றதாம்.

அப்படியானால், முகம் – இரு அரை சந்திர வடிவங்களும் இணைந்த – பௌர்ணமி நிலவு போல் என்றும் பிரகாசிக்கின்றதாம். (ஆகையினால் தான் அபிராம பட்டருக்கு அமாவாசையிலும் பௌர்ணமியை அம்பிகைத் தோன்றச் செய்தாள்.)

எட்டு என்ற எண்ணிக்கை அம்பிகைக்கு மிகவும் உகந்தது.

அஷ்டமியில் செய்யப்படும் ஸஹஸ்ரநாம பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது என்று இதன் பலச்ருதி விளக்குகின்றது.

வேதங்களும் அம்பிகையின் புகழை எட்டு என்ற எண்ணிக்கை கொண்டு போற்றுகின்றன. (கௌரிமிமாய ஸலிலானி … அஷ்டாபதி … )

அம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீ நகரத்தின் முதல் வாயிலில், அஷ்ட தேவதைகள் வீற்றிருப்பதாக ஸ்ரீ வித்யா பூஜை கூறுகின்றது.

எட்டின் மடங்கில் உள்ள எண்ணிக்கையை லலிதா ஸஹஸ்ரநாமம் பெரிதும் முக்கியத்துவமாகக் கொண்டுள்ளது.

(மஹா சதுசஷ்டி கோடி யோஹினி … 8X8 = 64 கோடி எண்ணிக்கை கொண்ட யோகினி எனும் தேவதைகளால் துதிக்கப்படுபவள்)

அம்பிகையின் நெற்றி – எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. (அதாவது 8 + 8 = 16 – பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை)

16 என்னும் எண்ணிக்கையும், சாக்த உபாஸனையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஷோடச (16) அக்ஷரம் (எழுத்துக்கள்) – சோடஷாக்ஷரீ எனும் (16 எழுத்துக்களைக் கொண்ட) ஸ்ரீ வித்யா மந்திரமே அம்பிகையை வழிபட உகந்த மிக மிக மேன்மையான உபாஸனா மந்திரம் என்று சாக்த சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.

அந்த 16ன் அம்சம் லலிதா ஸஹஸ்ரநாமம் முழுக்க விரவியிருப்பதைக் காணும்போது வியக்கத்தக்கதாக உள்ளது.

லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு வரியும் 16 எழுத்துக்களைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸிம் ஹா ச னே ச்வ ரீ – இது லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தின் முதல் வரி.

இந்த வரியிலுள்ள எழுத்துக்களை எண்ணிவந்தால் 16 எழுத்துக்களில் அமையும். (புள்ளி வைத்த ஒற்றெழுத்துக்கள் இலக்கண விதிப்படி கணக்கில் வராது)

அது மட்டுமல்ல ஒவ்வொரு வரியுமே 16 எழுத்துக்களைக் கொண்டு தான் அமைகின்றது.

இரண்டாவது வரி,

சி தக் னி கு ண்ட ஸம் பூ தா தே வ கா ர்ய ஸ முத் ய தா – 16 எழுத்துக்கள்.

(ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தினைச் சொல்லிவந்தால் எண்ணற்ற முறை ஸ்ரீ வித்யா மந்திரத்தினை சொன்ன பலன் கிடைக்கும் என்பது உபாஸகர்களின் மேலான கருத்து)

இரண்டு வரிகள் சேர்ந்தது ஒரு ஸ்லோகம்.

ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத் ஸிம்ஹாசனேஸ்வரி

சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய ஸமுத்யதா

இரு வரிகளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 16+16 = 32.

வடமொழியில் உள்ள எழுத்துக்கள் 51. (அ முதல் க்ஷ வரை)

இதில்,

அ எனும் எழுத்தில் தொடங்கும் அம்பிகையின் பெயர்கள் – 40

(அகாந்தா, அகுலா, அக்ஷமாலாதிதரா, அக்ரகண்யா…)

அதே போல, மற்ற எழுத்துக்களில் தொடங்கும் நாமாவளிகளைக் கீழே காணலாம்.

அ எனும் எழுத்தில் 40 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

ஆ எனும் எழுத்தில் 11

இ – 3

ஈ – 2

உ – 5

ஊ – 5

ஏ – 1

ஓ – 2

அம் – 4

க – 81

க(2) – 1

க(3) – 24

ச – 29

ச(2) – 1

ஜ – 18

ட(3) – 2

த – 46

த(3) – 37

த(4) – 14

ந – 75

ப – 81

ப(3) – 24

ப(4) – 37

ம – 112

ய – 13

ர – 38

ல – 14

வ – 79

ச – 59

ஷ – 5

ஸ – 122

ஹ – 11

க்ஷ – 9 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. (ஆக மொத்தம் ஆயிரம் நாமாவளிகள்)

வடமொழியின் 51 எழுத்துக்களில் நாமாவளிகள் ஆரம்பிக்காத எழுத்துக்கள்:

ஊ, ரு, ரூ, லு, லூ, ஐ, ஔ, அ:, க(4), ங, ஜ(4), ஞ, ட, ட(2), ட(4), ண, த(2), ப(2), ள – ஆகிய 19 எழுத்துக்களில் அம்பிகையின் பெயர்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆக, 51-19 = 32 எழுத்துக்களில் மட்டுமே நாமாவளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தின் உள்ள எழுத்துக்களும் 32 எண்ணிக்கையே.

லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று பகுதிகள் உடையது.

பூர்வ பாகம் 2. நாமார்ச்சனா பாகம் 3. பலச்ருதி பாகம்

பூர்வ பாகம் – 51 ஸ்லோகங்களும், நாமார்ச்சனா பாகம் – 182 1/2 ஸ்லோகங்களும்,

பலச்ருதி – 86 1/2 ஸ்லோகங்களும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

ஆக, மொத்த ஸ்லோகங்கள் = 320 (32ன் பத்தின் மடங்காக அமைவதைக் காணுங்கள்)

ஆதியந்தம் :

லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஆதி (முதல்) பதம் (வார்த்தை) – ஸ்ரீ மாதா

ஆயிரமாவது நாமாவளி – லலிதாம்பிகா

ஆதி அன்னையாக விளங்குபவள் லலிதா அம்பிகை என்பதையும், முதலும் முடிவுமாக உள்ளதையும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகின்றது.

லட்சியம் :

அம்பிகையிடம் – வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது ஸத்யபூர்வமான உண்மை.

அம்பிகை க்ஷிப்ர ப்ரஸாதினியாக விளங்குபவள். அதாவது எளிமையான பக்தியால் கூட விரைவில் திருப்தி அடைந்து விடுபவள். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதி மிக அருமையாக பல விளக்கங்களைத் தருகின்றது.

சிவ, விஷ்ணு ரூபிணியாக விளங்குவதால், அம்பிகையை, துளசி, தாமரை, வில்வம் கொண்டு ஸஹஸ்ரநாமத்தினால் அர்ச்சிப்பது ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களை அகற்றக்கூடியது.

பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கும் விதத்தை பாஸ்கர ராயர் அருமையாக விளக்குகின்றார்.

ஆயிரம் நாமாக்களையும் ஒரே வகை பூ கொண்டு அர்ச்சிப்பது பெரும் பேறு அளிக்கும்.

பல வகை மலர்கள் இருந்தால் தனித் தனி வகையாக அர்ச்சிப்பது மனதால் வேண்டுவதை அருளக்கூடியதாக இருக்கும்.

மலரின் மலர்ந்த தன்மை மாறாமல் அர்ச்சிக்க வேண்டும். மலர் எப்படி செடி கொடியில் மலர்கின்றதோ அந்த வகையிலேயே அர்ச்சிக்க வேண்டும்.

உதாரணமாக, செம்பருத்திப் பூ. அர்ச்சனை செய்யும் போது கையில் காம்பு கீழிருக்க, பூ மேலிருக்க அர்ச்சிக்க வேண்டும். இவ்வகை செய்வதால் வாழ்வாங்கு வாழலாம்.

பலவிதமான புஷ்பங்கள் கலந்திருந்தால், அவற்றை எடுத்து, புஷ்பாஞ்சலியாக நினைந்து (காம்பு கீழ் மேலாக இருந்தாலும் தோஷமில்லை) அர்சிப்பது கோடி கோடி புண்யத்தினை நல்கக் கூடியது.

பழங்களைக் கொண்டு நிவேதனம் செய்யும் போது, பழங்கள் எப்படி மரத்தில் பழுத்திருக்கின்றதோ அதைப் போலவே தாம்பாளத்தில் அமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். உதாரணம் மாம்பழம் – மாம்பழத்தின் காம்பு மேலிருக்க, பழத்தின் நுனி கீழிருக்க நிவேதனம் செய்வது அனைத்து விதமான பாபங்களையும் நீக்கக் கூடியது.

மேலும் பற்பல பலன்களை பலச்ருதி கூறுகின்றது.

ஸகல விதமான நோய்கள் நீங்கும், வம்சம் விருத்தியடையும், பல அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன் முதலானவற்றை அடுக்கிக்கொண்டே போகின்றது.

மிக விசேஷமாக பௌளர்ணமி அன்று இரவில், பௌர்ணமி நிலவை அம்பிகையாக மனதில் தியானித்து, ஐந்து வகையான உபசாரங்களோடு ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு அர்ச்சிப்பது மிக மேன்மையான பலனைத் தரக்கூடியது.

பௌளர்ணமி பூஜையை மந்த்ர மூர்த்தி தீக்ஷிதர் முதலான பெரியோர்களும், தவ ஞானியரும் பௌர்ணமி பூஜையை மிக விசேஷமாகச் செய்திருக்கின்றனர்.

தவக்கனல், அருட்புனல், கனகாபிஷேகம் கண்ட காஞ்சி அருள்வள்ளல் ஸ்ரீ மஹா பெரியவர் பௌர்ணமி பூஜையை மிகவும் விருப்பமுடன் செய்தவர். இப்படிச் செய்வது பெரும் ஞானம் கிடைக்க வழி செய்யும் என்றவர்.

லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தந்த்ரராஜம் கூறுகின்றது.

அனைத்து விதங்களிலும் பூரணமாக அமைந்த, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதால் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைத்திடும்.

5 .லயம் :

லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன.

உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வது, ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளையும் தருவதோடு, அம்பிகையோடு லயமாகிவிடும் (ஐக்கியமாகிவிடும்) மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது.

இதில் உள்ள அம்சங்கள் எத்தனை எத்தனை ?

அம்பிகைக்குரிய புஷ்பங்கள், நிவேதனங்கள், அம்பிகை உறையும் ஸ்ரீ நகரத்தின் விவரணை, தேவர்களைக் காத்திட்ட பாங்கு, தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வ நிலை, சிவ, விஷ்ணு, அம்பிகை – மூவரும் ஒன்று தான் என்னும் விளக்கம், யோக சாஸ்திர நிலைகள், ஞானம் அருளும் ஞானாம்பிகையாக, வேண்டுதல் அனைத்தையும் வரமளிக்கும் காமேஸ்வரியாக, புவனம் காக்கும் புவனேஸ்வரியாக அருள்பாலிக்கும் அம்பிகையைப் போற்றிச் சொல்லுகின்றது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.

லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு அம்பிகையை என்றும் போற்றிடுவோம் !

அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம்

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக