அஷ்டமா சித்திகள்

அஷ்டமா சித்திகள் சித்தம் அறிந்தவர்கள் சித்தர்கள், மனதின்ஆற்றலை உணராதவர்கள் சராசரி மனிதர்கள்.
மனம் எனும் மகா சக்தியின் ஆற்றலை முழுமையாக கண்டுணர்ந்து பயன்படுத்தியவர்கள் சித்தர்களாயினர். சித்தி என்றால் கைகூடுதல் என்று பொருள். அதாவது சித்தத்தின் ஆற்றலால் வேண்டும் செயலை செய்யும் அற்புதங்களை கைகூடப்பெறுதல்.
யோகக் கலையை சாதனமாக்கி அதன்பலனாக பலவித ஆற்றல்களை சித்தர்கள் கைவரப்பெற்றனர். அவற்றுள் மிக முக்கியமான எட்டு சித்திகளை அஷ்டமா சித்திகள் என்றனர். இந்த எட்டினுள் அணிமா, மகிமா, இலகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்திகள், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய ஐந்தும் மனதால் எய்தும் சித்திகள். இந்த அஷ்டமா சித்திகளும்ஒருவருக்குக் கைகூட வேண்டுமானால் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவம் இயற்ற வேண்டும் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.
தாரனை, தியானம், சமாதி இம்மூன்றையும் சேர்த்து ஒருமுகப்படுத்திப் பயில்வது சம்யமம் என்று அழைக்கப்படுகிறது. ஐம்புலன்களையும் அடுக்கி, அவற்றின் உணர்ச்சிகளை வெளியே செல்லாமல் மறித்து வைப்பது தாரணை என்னும் பயிற்சி. இந்த தாரணை நிலையை கொஞ்சம் மேம்படுத்தி மனதை ஒரு நிலைப்படுத்தி எண்ணமும் செயலும் ஒரு முகப்படுத்தப்படுவதே தியானம். இந்த தாரணை மற்றும் தியானம் கைவரப்பெற்ற நிலையில் இறைவன் காட்சி புலனாகும் விதமே சமாதி என்னும் சம்யயோக நிலையாகும். இந்த ஒரு முகப்படுத்தும் பயிற்சியையே சித்தர்கள் தாங்கள் அடையும் சித்திகளுக்கெல்லாம் முதற்படியாக கொண்டனர்.
எட்டு சித்திகளுள் முதலாவது அணிமா. இந்த சித்தியால் அணுவைப்போல் சிறியதாக தேசத்தை ஆக்கிக்கொள்ள இயலும். அனுமன் சிம்ஹிகி எனும் அரக்தியின் வாயினுள் புகுந்து வெளிப்பட்டதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இலங்கை சென்றபோது சின்னஞ்சிறு வடிவம் எடுத்து அவர் உலவியதும் இந்த வல்லமையால் தான்.
விசுவாமித்திர மகரிஷி இந்த ஒப்பற்ற சித்தி கைவரப்பட்டதால் தான் பிரபஞ்ச முழுவதும் பரவிய தம் மனத்தால் பிரபஞ்ச அணுக்களை கூட்டி ஒருங்கிணைந்து சந்திரன், சூரியன் முதலிய கோள்களை படைக்க தொடங்கினார். வாயு மீதான ஆளுகையினால் பூமியிலிருந்து கிளம்புதல், ஆகாயத்தில் உலாவுதல், நீர் மேல் நடத்தல், முள்ளில் படுத்தல் போன்ற அபூர்வமாக செயல்களை செய்திருக்கின்றனர் சித்தர்கள். வள்ளலார் சுவாமிகள் பூட்டப்பட்டிருந்த அறைக்குள்ளிருந்து வெளியேறியது இந்த சித்தியினால் தான். போகர், புலிப்பாணி சித்தர், யாகோபு சித்தர் போன்றோர் ஆகாய மார்க்கமாக பல தேசங்கள் சென்றதாக வரலாறு உண்டு.
நம் உடலானது பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைப்பாலேயே உருவானது. பிராண அணுக்களை கட்டுப்படுத்துவது பெறிய ஆற்றலாகும். இதன் மூலம் உணர்விழந்த பகுதிகளை உயிர் பெற செயயலாம். துவண்ட மூளையை நிலைக்க செய்யலாம். நோய்கள் அண்டாமல் மரணத்தை வென்று வாழலாம்.
சுருக்கமாகச் சொன்னால் அணிமா என்னும் இந்த ஒரு சித்தியே ஏறத்தாழ எல்லா சக்திகளையும் பெற வைத்துவிடம். இந்த ஆற்றலினால் வானம் மட்டுமல்ல ஞானமும் வசப்படும். அதனால் இதை ஆதார சக்தி என்றே சொல்லலாம்.
இரண்டாவது, மகிமா. பெயரைப் போலவே மகிமை மிக்க ஆற்றல் இது. இச்சக்தி கைவரப் பெற்றால் எல்லையில்லாமல் விரிந்து படரும் ஆற்றல் உண்டாகும். கண்ண பரமாத்மா விஸ்வரூப தரிசனம் எடுத்து மண்ணுக்கும் விண்ணுக்குமாக நின்றது இந்த மகிமா ஆற்றலால்தான். ஆனுமன் விஸ்வரூபம் எடுத்து இலங்கையை அழித்ததும் இதே சக்தியினால்தான். பேருரு எடுக்கும் பேராற்றல் மகிமா சித்தியால் கைகூடும் என்பதை அறிந்தவர்கள் சித்தர்கள். விண்ணுக்கும் மண்ணுக்குமான ஜோதி வடிவாக நின்ற ஈசனே இதனை அறிந்த முதல் சித்தன்.
மூன்றாவது கிரமா எனும் சித்தி. லேசான பொருளை மிகவும் எடையுள்ள பொருளாக மாற்றுவது. நமது உடலில் உள்ள பிரதான வாயுக்கள் பிராணணன், அபானன், உதானன், வியானன், சமானன் ஆகியவை. இவை உடலில் ஐந்து இடங்களில் இருந்து கொண்டு தம் வேலையைச் செய்கின்றன. இந்த வாயுக்களுக்கு துணை வாயுக்களாக நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனும் வாயுக்கள் இயங்கி வருகின்றன. இதில் நாகன் எனும் வாயு உடலியக்கங்களில் சம நிலைக்கும் நிதானத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. இந்த நாகன் வாயுவை கட்டுப்படுத்த யோகிகள் அறிந்திருந்தனர். மூச்சால் உடலை இறுக்கிக் கொள்ளும் பயிற்சி இது. கரிமாசித்தி இதைப்போல பலநூறு மடங்கு ஆற்றலைத் தருவது. இந்த சித்தியினை அடைந்தவர், கற்பாறை போல தரையோடு தரையாக படுத்தக் கொண்டு புயல், இடி, பூகம்பம் வந்தால் கூட அசையாதிருப்பர். உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ஓடும் சகல நாடிகளும் ஓர் இடத்தில் சங்கமிக்கும். நாபிக்கு அருகில் இருக்கும் அந்த முடிச்சே கண்டமூலமாகும். கண்ட மூலத்தை தியானம் செய்தால் உடலில் எங்கும் பரவி நிற்கும் நாகன் வாயுவை கட்டுப்படுத்தி ஆளுமை செய்யலாம். பிராணாயாமத்தை முழுமையாகச் செய்து பிரபஞ்ச சக்தியை எழுப்ப முடியும். அதன் பின்பு மூச்சின் மையமான பிராணனை சூட்சும்னா நாடிக்குள் செலுத்துவதன் மூலம் அஷ்டமா சித்திகளையும் அடையமுடியும்.
அடுத்தது, இலகிமா எனும் சித்தி. இலகு என்றால் லேசான என்று அர்த்தம் உண்டு. இலகிமா சித்தியினை அடைந்தால், கனமான பொருளை லேசாக மாற்ற இயலும். அபானன் எனும் வாயு, உடலின் கீழ்ப்பகுதிக்கு அழுத்தம் ஏற்படுத்தக்கூடியது. உதானன் வாயுவானது உடலின் மேல் பகுதியில் இருந்து கொண்டு மேல்நோக்கியே நகரக்கூடியது. இந்த உதானன் வாயுவை வெற்றி கொண்ட சித்தர்கள் நீர்மீது நடக்கிறவர்களாகவும், முள்மீது நிற்பவராகவும், ஆகாயத்தில் உலாவுபவராகவும் வல்லமை பெறுகிறார்கள். சித்தர்கள் ஆகாயத்தில் சஞ்சரிக்க எண்ணும்போது, பஞ்சபூதங்களுள் ஒன்றான நிலத்தை தியானப் பொருளாக சம்யமம் செய்து தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி கிடைத்த வெற்றியால் ஆகாயத்தை நிலப்பரப்பாக உணர்ந்து மடமடவென நடந்து செல்வார்கள். காலாங்கிநாதர் சீன நாட்டுக்குச் சென்று வந்ததும், அடிக்கடி உலக சஞ்சாரம் செய்து அதிசயங்கள் உணர்ந்து சீன மக்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்ல முடிந்ததும், இந்த இலகிமா சக்தியால்தான்.
கொங்கணவர், கருவூரார், சுந்தரானந்தர் போன்ற சித்தர்களும் ஆகாய மார்க்கமாக சீன நாட்டுக்குச் சென்று காலாங்கிநாதர் சமாதியை தரிசித்ததாகக் கூறுவர். அகத்திய மாமுனி ஆகாயமார்க்கமாகப் பறந்து வடநாட்டிலிருந்து தென் தமிழ்நாடு வந்து தமிழைப் பரப்பியதும், வைத்திய நூல்கள் அருளியதும் இலகிமா ஆற்றலினால்தான்.
ஐந்தாவது ஆற்றல், பிராப்தி சித்தி. ஒருவர் நினத்ததெல்லாம் நடந்துவிட்டால் வேண்டியனவெல்லாம் அவருக்குக் கிடைத்துவிட்டால் அவருக்கு பிராப்தி என்பது சித்தியாகிவிட்டது என்று பொருள். பிராப்தம் இருந்தால் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தான். பிராப்தி என்னும் சித்தி அடைந்தவர்கள் தங்களது கர்ம வினைகளை கூட தீர்த்துக் கொள்ள முடியும். சிதம்பரத்தில் நடைபெற்ற ஆனித்திருமஞ்சனக் காட்சியை ராமலிங்க அடிகள் இருந்த இடத்தில் இருந்தே கண்ட நிகழ்ச்சியை இந்த சித்திக்கு உதாரணமாகக் கூறலாம்.
ஆறாவது சித்தி, வசித்துவ சித்தி. தேவர்கள், மானிடர், அசுரர், விலங்குகள், பறப்பன, ஊர்வன, தாவரங்கள் முதலிய ஏழுபிறப்பையும் தன்வசப்படுத்தும் ஆற்றலே வசித்துவம் எனும் சித்தியாகும். திருநாவுக்கரசர் தன்னைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமபிரான் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும், வசித்துவம் என்னும் சித்ததால்தான் எனலாம்.
ஈசத்துவம் என்பது ஏழாவது சித்தி. ஈசத்துவம் என்பது ஈஸ்வரனுக்கு சமமான ஆற்றல் பெறுவதாகும். இந்த சித்தி கைவரப் பெற்ற சித்தர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என உடம்பின் கண் செய்யப்படும் முத்தொழில்களையும் எளிதாக செய்யும் வல்லமையுடையவர் ஆவார். கண்ணன் வாய்க்குள் ஈரேழு பதினான்கு உலகங்களையும் யசோதைக்கு காட்டியது அவனது ஈசத்துவ சக்தியால்தான். ஒரு சமயம், நவகிரகங்களின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால் பூமியில் மழை பொய்த்து கடும் பஞ்சம் நிலவியது. அப்போது இடைக்காடர் சித்தர் நவகிரகங்களையும் இடம் மாற்றி வைத்து மழை பெற்றச் செய்து பஞ்சத்தை போக்கினார். திருஞான சம்பந்தர், பாம்பு தீண்டி இறந்த பூம்பாவை என்ற பொண்ணுக்கு உயிர் கொடுத்து எழுப்பியது அவர் பெற்றிருந்த ஈசத்துவ சித்தியால்தான்.
அஷ்டமா சித்திகளுள் எட்டாவதான பிராகாம்ய சித்தியை அறிந்தவர், விரும்பும் உருவத்தை எடுத்துக் கொள்ள முடியும். அதோடு, நினைத்த இடத்திற்கு நொடியில் சென்று சேரமுடியும். அவ்வையார் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன் அழகான பெண்ணுருவை மாற்றிப் பேய்வடிவம் பெற்றதும் பிரகாம்யம் என்னும் சித்தியால் தான்.
மெய்யான சித்தர்கள் பெற்றிடும் தெய்வ ஆற்றல்கள் குறுகியகாலத்திற்கு குறளிவித்தை காட்டுவதுபோன்றவை அல்ல. செப்பிடு வித்தைகளோ, இந்திர ஜாலங்களோ கிடையாது. அவை நிலைத்திருந்து மற்றவர்களை வழிநடத்தும் ஆற்புத சித்துக்கள்.
சித்தர்களால் அறிந்து அறிமுகப்படுத்தப்பட்ட இத்தகைய சித்திகளைனைத்தும் சிவபெருமானால் உபதேசித்து அருளப்பட்டவையே. எனவே அவரே முதற்சித்தர் என்பதும், இந்த சித்திகள் அனைத்தும் பூவுலகில் பட்டமங்கை தலத்தில் முதன்முதலில் உபதேசிக்கப்பட்டதால் அவ்விடம் சித்தர்களின் தலைவாசல் என்பதும் திருவிளையாடல் புராணத்தினால் உறுதி செய்யப்படுகிறது.
பரகாயப்பிரவேசம்: சித்தர்கள் உலகில் மிகப்பிரபலமான பரகாயப்பிரவேசம் எனும் கூடுவிட்டுக் கூடு பாய்தல், தலையாய சித்தியாக கருதப்படுகிறது. அஷ்டமா சித்திகளுள் பிராப்தி என்னும் சித்தியின் ஒரு பிரிவாக இது அடங்கும். இறந்த உடம்பில் கூடுவிட்டு கூடு பாய்தலும், அதன் மூலம் காரியமாற்றுதலும், உயிருடனிருப்போரின் உடலுக்குள்ளேயே நுழைந்து அவரது மனத்தை இயங்க விடாமல் தடுத்து, அவர் மூலம்தான் இயங்குதலும் இந்த வேற்றுடல் நுழைவில் அடங்கும். தன் உடலை விட்டு வெளியே வந்து மீண்டும் நுழையக் கற்ற யோகியர் உடலை இங்கேவிட்டு விட்டு தூரதேசங்களுக்கெல்லாம் போய் திரும்புவதும் உண்டு. அப்போதெல்லாம் யோகியர் தமது நுட்ப உடலுடன் பயணிக்கின்றனர். இந்த சூட்சும உடல் சஞ்சாரத்தை சுவர், கதவு போன்ற தடுப்புகள் எதுவுமே தடுக்க முடியாது. ஆடோ மாடோ மனிதரோ வேறு எந்த பிராணியானாலும் அதனுடைய உடலுக்குள்ளே இருக்கும் மனத்திற்குள் தங்களது ஜீவனை செலுத்தி அந்தக் கூட்டை தம்முடைய வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வர். ஆதிசங்கரர் மகான், மன்னன் அருமனின் உடலுள் புகுந்து சரஸவாணியின் கேள்விக்க விடையறிந்து வந்தது இந்த முறையில்தான். பாம்பாட்டி சித்தர் ஓர் அரசன் இறந்தபோது அவன் உடலிற்புகுந்து அவன் மனைவியருகில் இருந்த செத்த பாம்பிற்குள்ளும் உட்புகுந்து அதனை ஆட்டுவித்தார். சுந்தரர் எனும் சித்தர் மலைக்காடுகளுள் திரிந்து கொண்டிருந்தபோது மூலன் எனும் ஆடுமேய்க்கும் இளைஞன் இறந்து கிடப்பதைப் பார்த்து அவனுடைய உடலுக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்து திரிந்து கொண்டிருந்த ஆடுமாடுகளை அவற்றின் இருப்பிடத்தில் சேர்த்தார். அதன் பின்னர் அவ்வுடலிலேயே இருந்து திருமூலர் என்றே அழைக்கப்பட்டார்.
ரசவாத சித்து: கொங்கணர் ரசவாத சித்தியில் கை தேர்ந்தவர். அதன் உதவியால் இவர் செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றை செய்து அதனை திருமழிசை ஆழ்வாரிடம், இது செம்பின் அணுக்களைத் தங்கமாக்கும் என்று கூறி தந்துவிட்டுச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக