விதுர நீதி

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.
மகாபாரதத்தில் பகவத் கீதை ஒருவகையான தத்துவ விளக்கம் என்றால் விதுரநீதி என்பது அரசியல் சமூக பொது

நீதி மொழி எனலாம்                                                                                                                  பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் துரியோதனன் அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் பாரதப் போர் நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர்.
சஞ்சையன் தூது
ஆனாலும் இருதரப்பினருக்கும் பொதுவான சிலர் போரினைத் தவிர்க்க தூது முயற்சிகளிலும் ஈடுபட்டனர். திருதராடிரனே இந்தப் போரினைத் தவிர்க்க எண்ணி தர்மபுத்திரனிடம் பேசிப் பார்க்கும் படி தன்னுடைய நம்பிக்கைக்குரிய சஞ்சையனை அனுப்பி இருந்தான்.
சஞ்சையன் பாண்டவர்களிடம் பேசிப் பார்த்து அவர்கள் தரப்பிலேயே நியாயம் இருப்பதை உனர்ந்து கொண்டு, பாரதப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதனை உணர்ந்து கொண்டு திருதராட்டிரனிடம் திரும்பினான். அப்போது இரவாகி விட்டதால் அவனிடம் தூது நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அவனைக் கடிந்து கொண்டு, மறுநாள் அரசவையில் மற்ற விவரங்களைச் சொல்வதாகக் கூறி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டான்.
திருதராட்டிரன் குழப்பம்
சஞ்சையனுடைய கடும் வார்த்தைகள் அவனுடைய தூதின் விளைவினைப் பட்டவர்த்தனமாகக் காட்டி விட்டதால் குழப்பத்தில் இருந்த திருதராட்டிரனுக்கு உறக்கம் வரவில்லை. எனவே விதுரனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் தன் உறக்கமின்மையைச் சொல்லிப் புலம்பினான்.
“அரசே! வலிமை குன்றியும் யுத்த தளவாடங்கள் சரியில்லாத நிலையிலும் இருக்கும் போது வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் உறக்கம் வராது. பொருளைப் பறி கொடுத்தவன், காமத்தோடு இருப்பவன், பிறர் பொருளில் ஆசை வைத்தவன், திருடன் ஆகியோருக்கும் உறக்கம் சாத்தியமாவதில்லை. இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள்?” என்று கேட்கும் ஆரம்பத்திலேயே விதுரனின் புத்திக் கூர்மை தெளிவாகத் தெரிகிறது.
விதுரநீதி
அவனுக்கு நேரடியாக விடை கூற முடியாத திருதராட்டிரன், “எதையாவது சொல். என் மன ஆறுதலுக்காகச் சொல். நீ நீதிவான். நீ சொல்லும் நியாய உரைகள் எப்போதுமே கேட்க நன்றாக இருக்கும்” என்று அவனை ஊக்கிப் பேச வைக்கிறான். அன்று இரவு முழுதும், விதுரன் அவனுக்குச் சொல்லும் நீதி உரைகளின் தொகுப்பே விதுர நீதியாகும் .
இது மகாபாரதத்தில் சஞ்சையன் தூதுக்கு அடுத்த பகுதியாக உள்ளது. இது ஒரு வாழ்வியல் பாடம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விளக்கங்கள் நிறைந்துள்ள நூல் இது.
எடுத்துக்காட்டு நீதி உரைகள்                                                                                                      இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்...

1.பண்டிதன் என்பவன், தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டல் மட்டுமே சொல்லுவான்.
2.பிறர் போற்றும் போது சந்தோஷமும் தூற்றும் போது துக்கமும் அடையாமல் இருப்பான்; தொலைந்து போனதை நினைத்து துக்கப்பட மாட்டான் பண்டிதன்.
3.அடங்கிப் போன பகையைத் தூண்டி வளர்க்கக் கூடாது.
4.வாக்கினை அடக்குவது மிகவும் கடினம். பொருட்செறிவுடனும் புதுமையாகவும் பேச வேண்டும். அதிகம் பேசுபவரால் இவ்வாறு பேச இயலாது;
6.பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
7.இரவில் சுகமாகக் காலம் கழிக்க வேண்டும் என்றால் அதற்குத் தக்கவைகளைப் பகலிலேயே செய்து விட வேண்டும்; மழைக்காலத்தைச் சுகமாகக் கழிக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்களில் உழைத்துச் சேகரித்து வைக்க வேண்டும்; 8.முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டுமென்றால் இளமையிலேயே அதற்குத் தக்கவைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
8.அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.
 8.சுக வாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு அறிவு வளர்ச்சி அடையாது.
 9.மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறுமையின்மை, தைரியம் ஆகிய ஐந்து குணங்களையும் ஒருபோது எந்த நிலையிலும் விட்டுவிடக் கூடாது                                                   10.விவேகி எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்பதால் அதை மாற்ற வழியில்லை.
11. வாழ்க்கையில் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான காலம் உண்டு.
 12.தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் நற்செயல்களையும் செய்தாக வேண்டும்.
 13.ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், ஏமாளியாக இருக்கக் கூடாது.
 14.ஆகாரத்தில் விருப்பமுள்ள மீன், பூச்ச்சியால் மறைக்கப்பட்டிருக்கும் இரும்புத் தூண்டிலைக் கவனிப்பதில்லை. ஆசைப்பட்டு ஆகாரத்தைத் தின்னப் போய் அதில் மாட்டிக் கொள்கிறது. ஆசை வயப்பட்ட மனிதனின் நிலையும் இதுதான்.
 15.அளவுக்கு மிஞ்சிய தூக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், மயக்கம், எதையும் தாமதமாகச் செய்தல் எனும் ஆறு குணங்கலும் முன்னேற்றப் பாதையின் முட்டுக்கட்டைகளாகும்.
 16.அறிவிலி எனப்படுபவன், மற்றவர்கள் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் வயிறு புடைக்க உண்டு களிப்பான்.
 17.அறிவிலி எனப்படுபவன், தனக்கு அறிவு இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல் கர்வமாக இருப்பான்.
18. தன்னை நாடி வரும் தீயவர்களையும் நல்லவன் கைவிடமாட்டான்.
 19.மற்றவர்கள் அவமதித்தாலும், தாக்கினாலும் பழிவாங்க விரும்பாமல் அமைதியாக இருப்பதுதான் பொறுமை.
 20.அறிவிலி எனப்படுபவன் தான் அழைக்கப்படாத இடங்களுக்கும் வேண்டுமென்று செல்வான்.
 21.தன்னடக்கமில்லாதவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்காது.
22. தைரியம் என்பது உடல் வலிமையுடனும், மன உறுதியுடனும் தொடர்புடையது.
 23.முதல்தரமான மனிதன் இந்த வையகம் வாழ வேண்டும் என்கிற கொள்கையை உடையவனாக இருப்பான்.
24. தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக மகிழ்ச்சி கொள்வதில்லை. அவமதித்தாலும் தாபத்தை அடைவதில்லை. கங்கையின் மடுவைப் போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.
 25.தீயோரின் சேர்க்கை அஞ்சத்தக்கது. அது எப்படிப்பட்ட நல்லவரையும் கெடுத்து விடும். காய்ந்த கட்டையுடன் சேர்ந்த ஈர மரமும் எரிந்துவிடும்.
 26.அகங்காரம் எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், கோபம் கொள்ளல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று கருதுதல், நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீய குணங்களும் கூர்மையான கத்தி போல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால், இவையே மனிதர்களைக் கொல்லுகின்றனவல்லாமல் யமன் கொல்கிறான் என்பதில்லை.
 27.புண்ணில் வேல் பாய்ச்சுபவனாகவும், கொடுஞ்சொல் பேசுபவனாகவும் இருக்கக் கூடாது.
28. மனத்தின் ஈடுபாட்டிற்கு ஏற்ப முயற்சியில் வெற்றியின் அளவு அமைகிறது.
 29.நல்லவர் உள்ளம் நல்லவர் அறிவர்.
30. நல்லவர்களைத் திட்டுவதனால் ஒருவன் பாவம் செய்தவனாகிறான்.
31. மனிதனின் மனத்தில் தீய விசயங்கள் உள்ளன. அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.
 32.அறிவிலி எனப்படுபவன், பகைவனை நண்பன் என்று நம்பி ஏமாறுவான்.
 33.ஒன்றை விரும்பும் போது அது நம்மிடம் இருக்கிறதா, அது நமக்குத் தேவைதானா, அதைத் தவிர்க்க முடியுமா என்று சிந்திப்பது அவசியமாகும்.
 34.படிப்பு, பாவச் செயல் செய்பவனைக் காப்பாற்றாது. நற்பண்பு ஒன்றுதான் காப்பாற்றும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக