அட்டாங்க யோகம்

அட்டாங்க யோகம்
யோகா என்பது என்ன?
யோகா = “தன்னையறிதல்”
யோகா என்ற வார்த்தை ‘யூஜ் ‘ என்ற சமஸ்க்ரித சொல்லில் இருந்து வந்தது. “யூஜ் ” என்றல் ஒன்று சேர் அல்லது இணை என்று அர்த்தம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருவானது. ஆதி யோகி ‘சிவன்”. சிவனிடமிருந்து நந்தி தேவருக்கும் ,நந்தீடமிருந்து சித்தர்களுக்கும் கற்பிக்கப்பட்டது.
திருமூலர் திருமந்திரத்தில் 3000க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். இந்த பாடல்கள் அனைத்தும் தமிழில் உள்ளது.பதஞ்சலி முனிவர் யோகா சூத்திரங்களை தந்துள்ளார். ஆனால் இவைகள் சமஸ்க்ரித மொழியில் உள்ளது. யோகா என்பது உடலை வளைப்பது அல்லது பிரணயாமம் செய்வது அல்லது தியானம் செய்வது மட்டும் அன்று. இதில் 8 நிலைகள் உண்டு. அதனை அட்டாங்க யோகம் என்பர். அவைகள் இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.
இவைகளைப்பற்றி திருமூலரின் பாடல்கள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம் .

அட்டாங்க யோகம்

“இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.”

தீதகற்றல், நன்றாற்றல், அளவிலா இருக்கை, வளிநிலை, தொகை நிலை, பொறை நிலை, நினைதல், நொசிப்பு என்னும் வழிமுறைத் தவநிலை பயிலுதல் வேண்டும். இயமம் – தீதகற்றல். நியமம் – நன்றாற்றல். ஆதனம் – இருக்கை. பிராணாயாமம் – வளிநிலை. பிரத்தியாகாரம் – தொகை நிலை. தாரணை – பொறைநிலை. தியானம் – நினைதல். சமாதி – நொசிப்பு.

1. இயமம்

“கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையின்நின் றானே.”

எந்த உயிரையும் கொல்லாதவன், புலன் அடக்கம் உள்ளவன், நல்ல தீர்ப்பு செய்ய வல்லவன், பொய் சொல்லாதவன், திருடாதவன் ,நற்குணம் உடையவன் ,கிடைத்த உணவை பகுத்து உண்பவன், குற்றமில்லாதவன், கள் குடியாதவன் , காம இச்சை இல்லாதவன், ஆகிய தகுதிகளை உடையவனே இயமத்தை கைவர பெற்றவன் ஆவான்.

2.நியமம்

“தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.”1

பொறிபுலன்களை அடக்கி, இறை சிந்தனையோடு இருப்பது தவம். இறைவனுடைய திருநாமங்களை உருச்செய்து , செபம் செய்து எப்பொழுதும் ஆனந்தமாய் இருப்பது, சந்தோடம் வேள்வி செய்தல் நுணுக்கமான ஒளி பொருந்திய ஆன்மீக அறிவோடு இருத்தல் வேண்டும் அதுவே நியமமாகும்.

3.ஆதனம்

“பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.”

பத்மாசனம் முதலாகப் பரந்துப்பட்ட ஆசனங்கள் பல உண்டு,அவற்றுள் சிறப்பாக சொல்லத்தக்கவை எட்டு. அவற்றுள் அனைத்து யோகத்தையும் செய்யச் சிறந்த ஆசனம் சுவத்திகாசனம். சுவத்திகாசனத்திலிருந்து யோகம் செய்தால்சிறந்த தலைவன் ஆகலாம்.

4.பிராணாயாமம்

“ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.”1

ஐம்புலன்களை கொண்ட உடலை இயக்குகிறது ஆன்மா. பிராணாயாமம் அல்லது வாசியோகம் மூலமாக ஆன்மாவை அறியலாம்.ஐம்புலன் என்பது குதிரைக்கு சமமாகக் கூறுகின்றார்.

“புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே.”

பறவையைக் காட்டிலும் விரைந்து செல்லக்கூடிய பிராணாயாமக் குதிரையை பயிற்சி மேற்கொள்வோமேயானால் கள் தரக்கூடிய போதையையும் மகிழ்ச்சியையும் அது கொடுக்கும். துள்ளி நடக்குமாறு செய்யும், சோம்பலை நீக்கும். இதை உணர்வுடையவர்களுக்கு மட்டும் தான் சொல்லித்தர வேண்டும் .

5.பிரத்தியாகாரம்

“கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலு மாமே.”
அபான வாயுவை வெளிப்படாமல் அடைத்து, மேலே ஒவ்வொரு ஆதாரங்களையும் பார்த்து, மனதை உள்ளே நிறுத்தி, மடையில் பெரிய மீனை எதிர்பார்த்து நிற்கும் கொக்கு போல அனாஹததில் நிலை பெற்றிருப்பவர்களுக்கு ஊழிக்காலம் வரை உடலை அழியாமல் வைத்துக்கொள்ள முடியும்.

6.தாரணை

“அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.”1
பசி, பிணி, மூப்புகளால் அரிக்கப்பட்ட இந்தவுடம்பை ஐம்பூதங்கலான மண். காற்று, நீர், நெருப்பு, நிலம், ஒடுக்கி, ஐம்பூதங்களை சுவை,ஒளி, ஊரு ஓசை, நாற்றம் என்னும் ஐந்தில் ஒடுக்கி அவற்றை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் கரணங்களில் ஒடுக்கினால் தாரணை நிலை பெற்றதாகும்.

7.தியானம்
“வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.”
பூதம் 5, தன் – மாத்திரை 5, அந்தக் கரணங்கள் 4 .ஆகியவற்றை தியானமுறைப்படி அந்தந்த ஆதாரங்களில் வைத்து தியானித்தல் சாதனை யோகா தியானமாகும். அதற்கு மேலாக ஒளி வடிவாய் இருக்கும் சக்தியையும் அருள் வடிவாய் இருக்கும் சிவத்தையும் தியானித்தல் சாத்திய யோகா தியானமாகும்.

8.சமாதி

“சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.”
சமாதி என்னும் முடிவு நிலையானது இயமம், நியமம், முதலிய எட்டு படிகளிலும் தவறாமல் நிற்பவர்க்கே கிட்டும் அட்டமாசித்திகளும் அமையும், சமாதி நிலை பெற்றவர்க்கே யோகமானது முற்றுப் பெறும்.

யோகப்பயிற்சியின் பலன்கள்:

01.உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பை குறைத்து உடல் பருமனை குறைக்கிறது.
02.உடலினை வலுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்கிறது.
03.மூச்சுப்பயிற்சியின் மூலம் உடலின் ஆயுளை அதகரிக்க முடியும்.
04.யோகப்பயிற்சியின் மூலம் உடலினை நாள் முழுவதும் புத்துணர்வாகவும், மனதினை அமைதியாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
05.முக்கியமாக உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
06.பாலியல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து மலட்டுத்தன்மையை போக்குகிறது.
07.யோகப்பயிற்சியனது அனைத்துவிதமான நோய்களுக்கும் குணமளிக்கவள்ளது.
08.உடல் மற்றும் மனதினை என்றும் இளமையாக வைக்க உதவுகிறது.
09.அலோபதி மருத்துவத்தில் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை எல்லாம் யோகா மூலம் தீர்க்கமுடியும். குறிப்பாக ஒற்றை தலைவலிக்கு தீர்வு காண முடியும்.
10.வாழ்க்கையின் இறுதி வரைக்கும் நோய் நொடி இல்லாமல் வாழ யோகா உதவுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக