ஒருவனுக்கு ஒருத்தி

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை வலியுறுத்துவதே
திருமாலின் ராமாவதாரம்.

ஜனகர் – சுனைனாவின் மகள் சீதை.
இவளை ராமர் திருமணம் செய்தார். ஆரம்பத்தில்
வாழ்க்கை அமர்க்களமாகச் சென்றது. மனிதனாய்
பிறந்து விட்டால் தெய்வத்தின் வாழ்வென்றாலும்
புயல் வீசக் கூடும். ‘பட்டாபிஷேகம் என்ற புயல்,
ராமர் வாழ்வில் சோதனையாக வந்தது; காட்டுக்குப்
போனார்.

மனைவியோ பதிவிரதை; ‘ராமன் இருக்குமிடமே
எனக்கு அயோத்தி என்று கணவனுடன் கிளம்பி
விட்டாள். தம்பி லட்சுமணன் அவரை விட்டு
ஒரு கணமும் பிரிய மாட்டான். அவனும், அவருடன்
புறப்பட்டான்.

மூவரும் காட்டில் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல;
சந்தர்ப்பவசத்தால் சீதையை ராவணன் கடத்திச்
சென்று விட்டான். அச்சூழலில், ராமர் நினைத்திருந்தால்
நாடு திரும்பியிருக்கலாம். அவரது தந்தைக்கு மூன்று
மனைவிகள். அவரைப் போல் இவரும் மறுமணம்
செய்திருக்கலாம். ஆனால், மனைவி மேல் உயிரையே
வைத்திருந்த ராமன், காட்டில் இருந்த மரம்
மட்டைகளிடம் கூட, ‘என் மனைவியைப் பார்த்தீர்களா?
என்று கேட்டுப் புலம்பினார். அந்தளவுக்கு மனைவி மீது
பற்று!

கடைசியில் ராவணன் மீது போர் தொடுக்கச் சென்றார்.
அவனது படையில், 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்;
அவர்களை ஜெயித்தார். ராவணனுடன்,அகம்பனன் என்ற
அசுரன் இருந்தான். நடுக்கம் என்பதே அறியாதவன் என்பது
இவனது பெயரின் பொருள்.

அவன் கூட, ராமன் தன்னைக் கொன்று விடுவாரோ
என்று நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன்
வந்து நின்றான்.

‘அத்தனை பேரும் உயிரிழந்து விட்டனரே… நீ மட்டும்
எப்படி தப்பி வந்தாய்? என்று கேட்டான் ராவணன்.

‘மன்னா… ராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் அதையே
எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப்
போல வேடமிட்டேன்; அவன் என்னை ஏறிட்டும்
பார்க்கவில்லை; தப்பி விட்டேன்… என்றான்.

ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பது தான் பொருத்தமென்று
வாழ்ந்து காட்டியவர் ராமன்.

ராமனைப் பற்றி இன்னொரு சுவையான தகவலும்
உண்டு.

அவரது தாய் கோசலை; அவருக்கு இன்னொரு அம்மாவும்
கிடைத்தாள்.

ராமன் இந்தப் பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள்
கவுதம முனிவரும், அவரது மனைவி அகலிகையும் தான்.
மனைவியை, ‘கல்லாகப் போ என்று சபித்த கவுதமர்,
விமோசனமாக, ‘திருமால், ராமவதாரம் எடுக்கும் போது,
அவரது பாதத்தூசு பட்டால், நீ சுய உருவம் பெறுவாய்…
என்று விமோசனமும் கொடுத்தார்.

பல யுகங்களாக கல்லாய் காத்திருந்தாள் அகலிகை.
அவளுக்கு சுயவடிவம் கொடுப்பதற்காகவே திருமால்
ராமாவதாரம் எடுத்தார். விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு
வந்த ராமனின் பாதத்தூசு பட்டு பெண்ணாய் மாறினாள்.

‘என் அன்னையைப் போன்ற தங்களுக்கு ஏன் இப்படி
நேர்ந்தது… என்று கேட்டு, அகலிகையை தாயாக ஏற்றார்
ராமர்.

ராம சரிதத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு
படிப்பினையைத் தரும்; 
அந்தப் படிப்பினைகளைப் பின்பற்ற
உறுதியெடுப்போம்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக